யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மரணம்! நீதிமன்றில் வெளிசத்திற்கு வந்த தகவல்.

36

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதியாகிறது என நீதிமன்றத்தில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(3) நடைபெற்றபோது நீதிவான் எஸ்.லெனின்குமார் இதனை வெளிப்படுத்தினார்.

மூத்த விரிவுரையாளர் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மார்ச் 21ஆம் திகதி தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விரிவுரையாளர் கொலை வழக்கில் சாட்சியம்,அவதானக் குறிப்புகள், நீதிமன்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவுரையாளரின் வீட்டில் குற்றச் சம்பவம் நடைபெற்றமை தெளிவாகுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தொடர் நடவடிக்கைகளுக்காக வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 16ஆம் திகதிக்கு திகதியிட்ட நீதவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை அன்றையதினம் வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகி வருகின்றனர்.