விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து:3 வயது சிறுவன், 5 வயது சிறுமி உயிரிழப்பு.!!

121

மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதி ஒன்றில் இன்று (27) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், நச்சுப் புகையில் சிக்கி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் 3 வயதுடைய ஆண் குழந்தையும், 5 வயதுடைய பெண் குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தகவல்களின் படி, தாயை பார்வையிடுவதற்காக தந்தையுடன் பதுளையிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த குடும்பம், நகரிலுள்ள விடுதியில் தங்கியிருந்தது. சம்பவம் நிகழ்ந்த வேளையில் தந்தை வெளியில் சென்றிருந்ததாகவும், குழந்தைகள் மட்டும் அறையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் அறையில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதுடன், தீயினால் உருவான நச்சுப் புகை அறை முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. புகை மூச்சுத்திணறலே குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.