மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு.

140

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமானது.

அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மறையாக விளங்கும் திருக்குறளை மையப்படுத்தி ‘உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்’ எனும் தொனிப்பொருளில் மாநாடு ஏற்பாட்டுக்குழு தலைவர் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துவ பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி சிறப்பு அதிதிகளாக , கம்பவாரி ஜெயராஜ் ,இந்து கலாச்சார அலுவலக திணைக்களப் பணிப்பாளர் ய.அநிருத்தனன், தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த.கணேசரத்தினம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சுவாமி விபுலானனந்தர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலையணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அதிதிகள் பரிமேலழகர் அரங்கான மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு மாநாட்டை கம்பவாரிதி ஜெயராஜ் ஆரம்பபித்து வைத்தார்.