களுத்துறையில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.!!

96

களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (02) அதிகாலை நடந்த இந்த விபத்தில், களுத்துறை, தூவ விகாரை வீதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது பேரப்பிள்ளையுமே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, கட்டுகுருந்தைச் சந்தையில் நிறுத்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, சிகிச்சைக்காகக் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாயாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விபத்து நடந்த தருணத்தில் பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர், பஸ் சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை திருடிச் சென்றுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் பஸ்ஸில் இருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது.