கல்லறைக்கு அடியில் தனி உலகம்: 55 லட்சம் தேனீக்களின் 100 ஆண்டு கால சாம்ராஜ்யம்.

42

மயானத்தின் நிலப்பரப்பிற்குக் கீழே சுமார் 55 லட்சம் சுரங்கத் தேனீக்கள் ரகசியமாக வாழ்ந்து வருவதைக் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நிலத்தடி தேனீக் கூட்டம்

ஆராய்ச்சியாளர்களின் கணக்கீட்டின்படி, இந்த மயானத்தின் அடியில் குறைந்தபட்சம் 30 லட்சம் முதல் அதிகபட்சம் 80 லட்சம் தேனீக்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சராசரி எண்ணிக்கை 55 லட்சமாகும். ஈஸ்ட் லான் கல்லறைத் தோட்டத்தின் கீழே சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தேனீக்கள் பரவியுள்ளன. இதுவரை உலகிலேயே பதிவு செய்யப்பட்ட நிலத்தடித் தேனீக்களின் மிகப்பெரிய கூட்டமைப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

ராணியும் இல்லை… தேன்கூடும் இல்லை

ஒவ்வொரு வசந்த காலத்திலும் இந்த மயானப் புல்வெளியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக லட்சக்கணக்கான தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதைக் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில்தான் இந்த உண்மை வெளிவந்தது. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தேனீக்களைப் போல இவை கூட்டமாகப் பெரிய தேன்கூடு கட்டி வாழ்வதில்லை. இவற்றுக்கு என்று ‘ராணித் தேனீ’ கிடையாது.

மாறாக, இதில் உள்ள ஒவ்வொரு பெண் தேனீயும் தனக்கென நிலத்தடியில் ஒரு தனித்துவமான சுரங்கக் கூட்டைத் தோண்டி, முட்டையிட்டு, தனது அடுத்த தலைமுறைக்காக மகரந்தங்களைச் சேமித்து வைத்துத் தனித்தனியாக வாழ்கின்றன.

 

100 ஆண்டுகாலப் பாரம்பரியம்

இந்த மயானத்தில் இருக்கும் வளமான மண் அமைப்பும், கூடு கட்டுவதற்கு இடையூறு இல்லாத அமைதியான சூழலுமே இத்தனை மில்லியன் தேனீக்கள் ஒரே இடத்தை தங்களது இருப்பிடமாகத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்துள்ளது. கடந்த 1900-களின் முற்பகுதியிலிருந்தே, அதாவது சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தேனீக்கள் தலைமுறை தலைமுறையாக இதே மயானத்திற்கு அடியில் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது சாதாரணமான 140 முதல் 200 பெரிய தேன்கூடுகளில் இருக்கும் தேனீக்களின் எண்ணிக்கைக்குச் சமமானதாகும். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மனிதர்களால் கைவிடப்பட்ட அல்லது கவனிக்கப்படாமல் இருக்கும் இதுபோன்ற இடங்களைப் பாதுகாப்பது, பூமியின் மிக முக்கியமான மகரந்தச் சேர்க்கை உயிரினங்களான தேனீக்களைக் காப்பாற்ற உதவும் என்பதற்கு இந்த மயானக் கண்டுபிடிப்பு ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.