உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி போல நடித்து மோசடி: ஒருவர் கைது!

85

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி எனப் போலியாகக் கூறி, இலங்கை முழுவதும் உள்ள வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித்தெரு காவல்துறையினர் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய தீவிர விசாரணையின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜயதிஸ்ஸ பண்டார” என்ற போலிப் பெயரில் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி, நபர் ஒருவர் வரி செலுத்துவோரிடம் பணம் கோருவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடந்த ஜூன் 05, 2026 அன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் ஒருவரால் கொம்பனித்தெரு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

கொம்பனித்தெரு காவல் நிலையப் பொறுப்பதிகாரி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் கடந்த 27ஆம் திகதியன்று கல்கமுவ பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்றவர்கள் அல்லது அவருக்குப் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் யாராவது இருப்பின், உடனடியாகக் கொம்பனித்தெரு காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியையோ அல்லது 011-2135000 என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர உதவி இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தடுக்கவும், மேலதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய உதவவும் இந்தச் சதித்திட்டம் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகங்களுக்கும் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகக் குழுவின் தலைவரும், பிரதி ஆணையாளர் நாயகமுமான என்.எம்.ஏ.கே.பி. நாபானவினால் இந்த உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.