RR vs DC: ‘டெல்லி அணி வெற்றியால்’.. சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்.

54

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றியைப் பெற்றதால், சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இனி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆப் வாய்ப்பு சற்று சுலபமாக மாறியுள்ளது.

ஐபிஎல் 2026 சீசனின் 62ஆவது லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 193/8 ரன்களை குவித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் அபாரமாக செயல்பட்டனர். வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 46 ரன்களையும், துரூவ் ஜோரல் 40 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்களையும் அடித்தனர். கேப்டன் ரியான் பராக்கும் அபாரமாக செயல்பட்டு 26 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 51 ரன்களை குவித்து அசத்தினார்.

அதன்பிறகு, மற்ற பேட்டர்கள் யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், முதல் 14 ஓவர்களில் 161 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதியில், 20 ஓவர்களில் 193/8 ரன்களை மட்டுமே எடுத்தது. குறிப்பாக, கடைசி 6 ஓவர்களில் 33 ரன்களை ட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 6 ஓவர்களில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை மட்டுமே அடித்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில், ஓபனர்கள் அபிஷேக் போரல் 51 (31), கே.எல்.ராகுல் 56 (42) ஆகியோர் சிறந்த துவக்கத்தை கொடுத்தனர். ஆட்டத்தின் இரண்டாவது பந்தில், ஜோப்ரா ஆர்ச்சர் வேகத்தில் கே.எல்.ராகுல் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஆனால், அதனை பிடிக்கவில்லை. இந்த கேட்ச் தான் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

பிறகு, கேப்டன் அக்சர் படேல் 34 (18), அசுதோஷ் சர்மா 18 (5) ஆகியோர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால், டெல்லி கேபிடல்ஸ் அணி, 19.2 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை எடுத்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

ராஜஸ்தானுக்கு பின்னடைவு: இப்போட்டியில் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்த 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றால்தான் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும் என்ற இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டது. இந்த அணி, முதல் 4 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்ற நிலையில், அடுத்த 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இப்படி ராஜஸ்தான் அணி பலவீனமாக இருப்பது, சிஎஸ்கேவுக்கு நல்ல விஷயமாக மாறியுள்ளது.

சிஎஸ்கே அணியும், தற்போதுவரை 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் இருக்கிறது. இருப்பினும், ராஜஸ்தான் அணியைவிட பலமிக்க அணியாக இருப்பதால், அடுத்த 2 போட்டிகளில் சிஎஸ்கே வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிட்டன. சன் ரைசர்ஸ் அணி, கடைசி 2 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும். எஞ்சிய ஒரு இடத்திற்கு, 16 புள்ளிகளில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் பலத்த போட்டி இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸால் இனி அதிகபட்சமாக 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.

அதாவது, சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு போட்டியில் தோற்று, பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு வெற்றியைப் பெற்றால், பஞ்சாப் கிங்ஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலைமை இருக்கிறது.