மத்திய கிழக்கு போர் தாக்கம்: உச்சம் தொட்ட உலக உணவு விலைகள்.!

125

மத்திய கிழக்கில் தொடரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்ததையடுத்து, உலகளாவிய உணவு விலைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.

FAO வெளியிட்ட தகவலின்படி, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக உணவு விலைக் குறியீடு 2.4% அதிகரித்துள்ளது. இதில் சர்க்கரை விலைகள் 7.2%, சமையல் எண்ணெய் விலைகள் 5.1% மற்றும் கோதுமை விலைகள் 4.3% உயர்ந்துள்ளன. அதே நேரத்தில் அறுவடை காலம் மற்றும் குறைந்த இறக்குமதி தேவை காரணமாக அரிசி விலை 3.0% குறைந்துள்ளது. மேலும், போர் 40 நாட்களுக்கு மேல் நீடித்தால் மற்றும் எரிபொருள், உரம் போன்ற உற்பத்தி செலவுகள் அதிகமாக இருந்தால் விவசாயிகள் சாகுபடியை குறைக்க நேரிடலாம் என FAO எச்சரித்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உணவு விநியோகம் மற்றும் விலைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் உணவு பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிர்காலத்தில் விலை உயர்வு மேலும் தீவிரமடையக்கூடும்.