மட்டக்களப்பில் பெண்கள் கடத்தி நகை கொள்ளை: மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது!

110

மட்டக்களப்பு பகுதியில் பெண்களைக் கடத்தி, அவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு பாழடைந்த கிணற்றுக்குள் வீசிய சம்பவம் தொடர்பில் மயக்க மருந்து தெளிப்புக் கருவியுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பிரதான சந்தேகநபர்கள் உட்பட இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, கடத்தப்பட்ட பெண்களுக்கு சத்திர சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளைத் தெளித்து மயக்கமடையச் செய்து கொள்ளை நடத்தியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியிடமிருந்து மயக்க மருந்து தெளிக்கும் கருவி கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதி வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு சென்ற இளம் தாய் மற்றும் அவரது இரண்டரை வயது குழந்தை காணாமல் போன நிலையில், மறுநாள் தாய் பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார்; குழந்தை வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டதுடன், அதே கிணற்றில் இருந்து மற்றொரு பெண்ணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இரண்டு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட இரண்டு முச்சக்கரவண்டிகள், ஒரு கார், கோடரி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த குற்றவியல் வலையமைப்பின் மேலும் தொடர்புடையவர்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.