யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி வெடித்த போராட்டம்!

216

யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொடருந்து கடவைக்கு முன்பாக பொதுமக்கள் இன்றையதினம் (22) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போக்குவரத்து சிரமங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உடனடி தீர்வு கோரி இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, “வேண்டும் வேண்டும் வீதி வேண்டும், இலகுவான போக்குவரத்தை உறுதி செய், மக்களுக்கு பாதுகாப்பான பாதை வேண்டும், எரிபொருள் பிரச்சினையான நேரம் பாதையை மூடாதே” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் நடைபெற்ற போது அப்பகுதியில் காவல்துறையினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.