மத்திய கிழக்கு வான்பரப்பில் பதற்றம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சேவைகள் திடீர் ரத்து.!!

130

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, இலங்கையிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமானங்கள் மற்றும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்லவின் தலைமையில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு செல்வதற்கு முன்னர் தங்களது விமான சேவைகள் முகவர் நிலையத்துடன் கலந்துரையாடி செல்வதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற்கொண்டு இலங்கையர்கள் தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

வட்ஸ் அப் இலக்கம் : +94 71 980 2822