உலகத்தரம் பெறும் பலாலி விமான நிலையம் – அமைச்சர் அநுர வெளியிட்ட அதிரடித் தகவல்.

122

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் பயணிகள் முனைய விரிவாக்கத் திட்டம் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, விமான நிலையத்தின் குறித்த அபிவிருத்திப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திட்டத்தின் முதல் கட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தொடங்கும் என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilaka) உறுதிப்படுத்தியுள்ளார்.

பயணிகள் முனையத்தை விரிவுபடுத்தும் திட்டம், நாட்டிற்குள் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், வடக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் அநுர கருணாதிலக உள்ளிட்ட குழுவினர் கடந்த19ஆம் திகதி அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.