முல்லைத்தீவு ஒலிம்பிக் வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை.!

114

பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் இருந்து செல்லும் ஒலிம்பிக் வீதியை அகலித்து புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் கிராமத்தில் வசித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற ஒரு வீதியாக பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இருந்து குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதிகளில் ஒன்றாக ஒலிம்பிக் வீதி காணப்படுகின்றது.

இந்த வீதியானது கோம்பாவில் கிராமத்திலிருந்து செல்லும் ஒருபகுதி கடந்த 2019ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எஞ்சிய பகுதி இதுவரை புனரமைக்கப்படாது காணப்படுகின்றது.

இவ்வீதியின் குறிப்பிட்ட வீதியின் இருபக்கமும் ஐநூறு மீட்டர் வரையான பகுதி தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டு நீண்ட காலமாக இருப்பதனால் இந்த வீதியை முமுமையாக புனரமைக்க முடியாதுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை ஆகியற்றுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போதும் குறித்த வீதியில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதனால் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே குறித்த வீதியினை அகலித்து புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.