ட்ரம்ப் மீதான புதிய சதித் திட்டம் – இஸ்ரேல் உளவுத்துறை தகவல்.

87

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் குறிவைத்து ஈரான் புதிய சதித் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய உளவுத் தகவல்களை அமெரிக்காவுடன் இஸ்ரேல் பகிர்ந்துள்ளதாக, விடயத்தை அறிந்த தரப்புக்களை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயத்தை வாஷிங்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மறுத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஈரானின் நிரந்தர பிரதிநிதித்துவமும் இந்த விடயத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

இதனிடையே, ஈரானின் இலக்கு பட்டியல்களில் ஒவ்வொன்றிலும் தான் இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக கட்டார், பாகிஸ்தான் உள்ளிட்ட பிராந்திய மத்தியஸ்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.