மகளை காப்பாற்ற தந்தை செய்த மோசமான செயல் – பரிதாபமாக உயிரிழந்த மருமகன்.!

58

அம்பாந்தோட்டை – மால்பெத்தாவ பகுதியில் குடும்பத் தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(07.06.2026) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அம்பாந்தோட்டை – மாமடல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, உயிரிழந்தவரின் மனைவி அம்பாந்தோட்டை மால்பெத்தாவிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று (07) இரவு சுமார் 11.00 மணியளவில், அதிக மதுபோதையில் டிப்பர் வாகனத்தில் அங்கு வந்த கணவன், மனைவியை மீண்டும் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவர் வந்த டிப்பர் வாகனத்தால் வீட்டின் பிரதான நுழைவாயிலில் மோதிச் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அவர், மனைவியைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் தனது தந்தை இருந்த அறைக்குள் ஓடிச் சென்றுள்ளார்.

அதன்பின்னரும் தனது மகளை தாக்குவதைத் தடுக்க முயன்ற தந்தை, மரக்கட்டையால் தனது மருமகனைத் தாக்கியுள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாமனார் அம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.