வெனிசுலா போர் பதற்றம்…! இலங்கையில் மீண்டும் எகிறப்போகும் எரிபொருள் விலை

170

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய துல்லியமான தாக்கத்தை அரசாங்கத்தினால் தற்போது கணிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்கனவே ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிதி அமைச்சு மற்றும் ஏனைய துறைசார் அமைச்சுகள் கலந்துரையாடி தகுந்த தீர்மானங்களை எடுக்கும் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலைத்திருத்தம் குறித்த இறுதி முடிவுகளுக்கமைய எதிர்காலத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.