வாவியில் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து 20 வயது இளைஞன் பரிதாப பலி.!

62

மட்டக்களப்பு புதூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்பாக நேற்று (27) மாலை இடம்பெற்ற துயரமான விபத்தில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவல்களின் படி, விமானப்படை முகாமிற்கு அருகிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த அவர், மோட்டார் சைக்கிளுடன் அருகிலிருந்த வாவிக்குள் வீழ்ந்துள்ளார்.

சம்பவத்தை கண்டு உடனடியாக விமானப்படை வீரர்களும் பொதுமக்களும் இணைந்து இளைஞரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.