யாழில் ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

108

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பெருங்குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட விசாரணைகளில், 58 வயதுடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு, நேற்று (பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நான்காவது பங்குனித் திங்கள் உற்சவத்தின் போது) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், கிளிநொச்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி மீட்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.