மட்டக்களப்பில் உணவகத்தில் தாக்குதல்: கொத்து தயாரித்த நபர் கடுமையாக காயம்.!

141

மட்டக்களப்பு அரசடி பகுதியில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 02) நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இரவு நேரத்தில் இயங்கும் உணவகத்தில் பணியாற்றிய நபர் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்ப தகவல்களின் படி, மதுபோதையில் வந்த இளைஞர்கள் குழுவினர் இரவு 12.00 மணியளவில் உணவகத்துக்கு வந்து கொத்து ரொட்டி ஆர்டர் செய்துள்ளனர். உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, கொத்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நபரை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில், அவர்களை கைது செய்ய மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.