பொதுமக்கள் வீதியில் போராட்டம் : மதுபான உரிமத்தை இரத்துச்செய்ய கோரிக்கை.!!

133


நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்திற்கு அருகாமையில் வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பட்டமானது, இன்று(3.1.2026) காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், வெஞ்சர் பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு வழங்கப்பட்ட உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகாரிகள் உரிமத்தை புதுப்பிக்கக்கூடாது, அதனை உடனடியாக இரத்து செய்து, மதுபானக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கோயில், பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியன மதுபானக் கடைக்கு அருகில் அமைந்துள்ளதால், மத விழாக்கள் மற்றும் பொது நடவடிக்கைகளின் போது தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மதுபான சாலை காரணமாக புலமைப்பரிசில் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் குழந்தைகள் கூட க.பொ.த சாதாரண தரத் தேர்வில் தோல்வியடையும் நிலை ஏற்படுவதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சிலர் புத்தகங்களை விற்று மது வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதனால் குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த மதுபானக் கடை, அநப்பகுதியில் உள்ள மக்களின் அமைதியை சீர்குலைத்துள்ளதாகவும் இந்த அமைதியற்ற சூழல் கடந்த காலங்களில் உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்ததாகவும் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த மதுபானக் கடை எங்கள் கிராமத்திற்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த கடையின் உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது. எனவே, ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இந்த உரிமத்தைப் புதுப்பிக்காமல் இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், நோர்வுட் பிரதேச சபையின் இரு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு ஆகியன குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.