புத்தளத்தில் லொறி விபத்தில் சிக்கிய இளைஞர் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

117

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(11.01.2026) 6ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞர், சிகிச்சை பலனின்றி இன்று(12) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், தவல, அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், லொறியின் சாரதி வாகனத்தைச் சம்பவ இடத்திலேயே கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சில நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.