புதிய கொரோனா ‘சிக்காடா’ (BA.3.2) திரிபு 23 நாடுகளில் கண்டறிதல் – WHO தீவிர கண்காணிப்பு!

124

கொரோனா வைரஸின் புதிய துணைத் திரிபான BA.3.2 (‘சிக்காடா’) தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரணமான மரபணு மாற்றங்களும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிப் பரவும் திறனும் காரணமாக, இந்தத் திரிபை உலக சுகாதார ஸ்தாபனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அமெரிக்காவில் 2025 ஜூன் மாதத்தில் முதல் முறையாகப் பதிவாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, இந்தத் திரிபில் 70 முதல் 75 வரை மரபணு மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வைரஸ் மனித உடலுக்குள் நுழைய உதவும் ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் பரவிய ‘JN.1’ திரிபிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இதுவரை கிடைத்துள்ள தரவுகளின்படி, இது ஓமிக்ரான் போலவே மென்மையான அறிகுறிகளையே ஏற்படுத்துகிறது. இருமல், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, மிதமான காய்ச்சல், அரிதாக வாசனை/சுவை இழப்பு மற்றும் இரவு வியர்த்தல் போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

இந்த புதிய திரிபு நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு தவிர்க்கும் திறன் கொண்டிருந்தாலும், தற்போதுள்ள தடுப்பூசிகள் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் இந்தத் திரிபின் பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.