புகைப்பழக்கம் இதய நோய்களுக்கு காரணமா? நிபுணர்கள் விளக்கம்.!!

119

புகைபிடித்தல் உலகளவில் இதய நோய்களின் முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீப ஆண்டுகளில் இளம் வயதினரிடையே கூட இதய நோய் அதிகரித்து வருவது மருத்துவர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

முன்னர் 50 அல்லது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாகக் காணப்பட்ட இதய நோய்கள், தற்போது 20களின் இறுதி, 30கள் மற்றும் 40களின் ஆரம்பத்தில் உள்ளவர்களிடமும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக புகைப்பழக்கம் குறிப்பிடப்படுகிறது.

புகைபிடித்தல் இதயத்தை எப்படி பாதிக்கிறது?

ஒருவர் சிகரெட் புகைபிடிக்கும் போது, இதயத்தில் ஏற்படும் பாதிப்பு உடனடியாகத் தொடங்குகிறது. ஒவ்வொரு சிகரெட்டும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, இரத்த அழுத்தத்தையும் உயர்த்துகிறது. இதனால் இதயம் வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால், இதய தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பு மற்றும் பிற இதயப் பிரச்சினைகளுக்கான அபாயம் அதிகரிக்கிறது.

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் அபாயம்

சிகரெட் புகையில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவங்களை உருவாக்க உதவுகின்றன. இந்த படிவங்கள் இரத்த ஓட்டத்தை மெதுவாகக் குறைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைக்கின்றன.

இதன் விளைவாக மார்பு வலி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் தோன்றலாம். சில சமயங்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் மாரடைப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இரத்தம் தடிமனாகி இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம்

புகைபிடிப்பதால் இரத்தம் தடிமனாகி, இரத்த ஓட்டம் சிரமமாகும். இதனால் இரத்தக் கட்டிகள் எளிதில் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த கட்டிகள் இதயம் அல்லது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கும்போது திடீர் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம்.

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைதல்

சிகரெட் புகையில் உள்ள தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை குறைக்கின்றன. இதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்க இதயம் அதிக வேகமாகவும் கடினமாகவும் வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.காலப்போக்கில் இந்த கூடுதல் அழுத்தம் இதயத்தை பலவீனப்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

புகைப்பழக்கத்தை நிறுத்துவது ஏன் முக்கியம்?

மருத்துவர்கள் கூறுவதாவது, புகைப்பழக்கத்தை நிறுத்துவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமாகும். புகைபிடிப்பதை நிறுத்திய சில வாரங்களுக்குள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கும்.மேலும், காலப்போக்கில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் கணிசமாகக் குறைகிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, புகைபிடித்தல் ஒரு சாதாரண பழக்கமாக தோன்றினாலும், அதன் தாக்கம் இதய ஆரோக்கியத்தில் மிக தீவிரமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். அதனால் புகைப்பழக்கத்தை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும்.