நூதனமான முறையில் நடந்த தங்க நகை திருட்டு- பட்டப்பகலில் துணிகரம்!

154

ஹட்டன் நகர்பகுதியில், வாடிக்கையாளர் போன்று வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(21.01.2026) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள கடையொன்றில் பிற்பகல் 2.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாடிக்கையாளர் போன்று கடைக்குள் வந்த சந்தேக நபர், தங்க மாலைகளை பார்வையிட்டுள்ளார். அதன்பின்னர், இரண்டு லட்சத்து எண்பத்தொன்பதாயிரம் ரூபா பெறுமதியான நகையொன்றினை தெரிவு செய்து அதற்கான பற்றுச்சீட்டினை எழுதி பெற்றுக்கொடுக்க முற்படும் போது தங்கை நகையை எடுத்துகொண்டு ஓடியுள்ளார்.

இவை அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த போது கடையின் உரிமையாளர் வெளியில் சென்றுள்ளார் என்றும் கடையில் பணிப்புரியும் இரண்டு பெண்கள் மாத்திரம் இருந்துள்ளனர் என்றும் பொலிஸார் மேற்கொண்டு ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இன்று 22ஆம் திகதி முறைபாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.