நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் ; 3 வீடுகள் தீக்கிரை ; 12 பேர் நிர்க்கதி!

128

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தீப்பரவல் காரணமாக அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

விபத்தின்போது வீட்டில் இருந்தவர்கள், தீ எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் மற்றும் தகவல் அறிந்து உரிய இடத்துக்குச் சென்ற நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் ஆகியோர் பெரும் முயற்சியெடுத்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்த நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ், கிராம சேவகரின் உதவியுடன் மேலதிக நடவடிக்கைகளை  எடுத்து வருகிறார்.