நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் ; குவியும் சுற்றுலாப் பயணிகள்

84

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஏப்ரல் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர்க் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் சிவன்ஜோதி யோகராஜா உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மலர் கண்காட்சி இன்றும் (17) நாளையும் (18) ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலர் கண்காட்சி போட்டியில்  பங்குபற்றியவர்களுக்கு கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பல வண்ண மலர்த் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளையும் பார்வையளர்களையும் கவரும் வகையில் பறவைகள், செல்லப் பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

கண்காட்சியை காணச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள மலர்ச் செடிகள், மலர் அலங்காரங்கள், மலரால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக மலர்கள் மூலம் அலங்காரம் செய்துள்ள பறவைகளின் உருவங்களை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் அவற்றுக்கு முன்பு நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். இதில் சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.