தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 10 லட்சம் ரூபாய் செலுத்த நிபந்தனை.!!

160

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டத்தில், சென்னை அணித்தலைவர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி, ரூ.100 கோடிமான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த ஆண்டு தோனியின் வாக்குமூலத்தை வழக்குரைஞர் ஆணையர் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் பதிவு செய்தது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய விவாத நிகழ்ச்சியின் சிடி-யை எழுத்து வடிவமாக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது.

சிடியை எழுத்துவடிவமாக்க 3 முதல் 4 மாதங்களுக்கு மொழிபெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. மேலும் எழுத்து வடிவமைக்கப்பட்டதை நகல் எடுக்க கூடுதல் செலவு ஏற்படும்.

எனவே மார்ச் 12 ஆம் திகதிக்குள் இதற்கான மொழியாக்க கட்டணமாக ரூ.10 லட்சத்தை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு தோனி செலுத்த வேண்டும் என நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.