தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் – பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

100

பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர்.

முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்பது தொடர்பான தனியார் கல்லூரியின் ஆய்வு அறிக்கையை தானாக முன்வந்த விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய, மாநில அரசுகளை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றை தானாக முன்வந்து விசாரித்தது.

அந்த ஆய்வில், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் ஏ (BPA) வகை ரசாயனம், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் தன்மைவாய்ந்த பிஸ்பினால் ஏ வகை ரசாயனம், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களின் ஒப்புதலுடன் அவர்களின் தொப்புள் கொடியில் இருந்து ரத்த மாதிரிகளை மருத்துவக் குழு சேகரித்துள்ளது இவற்றில் பிபிஏ (Bisphenol A) அளவானது ஒரு கிலோ எடைக்கு 0.43 மைக்ரோகிராம் முதல் 1.1578 மைக்ரோகிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. இவை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தன’ என அந்த ஆய்வு கூறுகிறது.