தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! வெளியாகியுள்ள புதிய விலை.

168

உலக பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை இன்றையதினம் (29) வரலாற்றில் முதன்முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு அமெரிக்க டொலர் 5,500-ஐ கடந்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி காலை 7.55 மணிக்கு தங்க விலை 4 சதவீதம் உயர்ந்து, அவுன்ஸ் ஒன்றுக்கு 5,555.10 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 26 அன்று முதன்முறையாக 5,000 டொலர் அளவை தாண்டிய தங்கம், தொடர்ந்து நான்கு நாட்களில் 500 டொலருக்கும் மேலான உயர்வை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி 28 அன்று ஈரானை அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு வலியுறுத்தியிருந்தார். இதற்கு ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களை ஆதரிப்போருக்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.

இதனால், உலகளவில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அதேவேளை, அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) ஜனவரி 28 அன்று தொடக்கம் வட்டி விகிதங்களை மாற்றமின்றி வைத்துள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பின்னர், வர்த்தகர்கள் ஜூன் மாதத்தில் வட்டி விகிதக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இருப்பினும், அதற்கு முன் வட்டி குறைப்பு நடைபெற வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர்கள் கிறிஸ்டோபர் வாலர் மற்றும் ஸ்டீபன் மிரன் ஆகியோர், கால் சதவீத வட்டி விகிதக் குறைப்பை ஆதரித்து வாக்களித்திருந்தாலும், பெரும்பான்மையான முடிவாக வட்டி விகிதம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், குறைந்த வட்டி விகித சூழலில் அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதால், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 25 சதவீதத்திற்கும் மேலான உயர்வை கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்க விலை 64 சதவீதம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தங்க விலை புதிய உச்சங்களை எட்டியுள்ளதால், சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் நகரங்களில் தங்க நகை மற்றும் தங்கக் கட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். தங்க விலை மேலும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பில் பலர் முதலீடு செய்ய முனைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.