சொகுசு வாகனம் தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் சுருட்டல்! பெண் அதிகாரி அதிரடி கைது.

145

அரச நிர்வாக அமைச்சின் உதவி மேலதிக செயலாளர் ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

சொகுசு வாகனம் வாங்கித் தருவதாகக்கூறி மருத்துவர் ஒருவரிடமிருந்து இரண்டு கோடியே இருபத்தி ஏழு இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தெஹிவளை, நெதிமாலப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் அதிகாரி ஆவார். கடந்த டிசம்பரில் கொழும்புப் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஏழு மாதங்களுக்கு முன்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் முறைப்பாடு செய்த மருத்துவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார்.

மேலும், துறைமுக வளாகத்தில் ஏலத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை சலுகை விலையில் வழங்க முடியும் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பின்னர் மருத்துவருக்கு வாகனம் அல்லது பணத்தைக் கொடுக்காமல் தப்பிச் சென்றதாகவும், அதன்படி மருத்துவர் சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (20) கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.