கொழும்பில் பாரிய பிரமிட் மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு கும்பல் – சுற்றிவளைத்த பொலிஸார்.

36

இலங்கையில் விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்து பிரமிட் மூலம் சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்ட 16 சீன நாட்டினரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 23 மடிக்கணினிகள், 11 கையடக்க தொலைபேசிகள், 07 ரவுட்டர்கள், 09 குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் மற்றும் 3280 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு 05, ஜாவத்த வீதி, தொன் கரோலிஸ் வீதி என்ற முகவரியில் தற்காலிகமாக குடியேறிய சீன பிரஜைகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், கறுவாத்தோட்டம் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் எச்.எச். சுஜீவ குமார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் விக்ரமரத்ன ஆகியோர் அடங்கிய குழு இந்த சோதனையை நடத்தியது.

கைது செய்யப்பட்ட 16 சீனர்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வரி இல்லாத சிகரெட்டுகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவர்களின் வளாகத்தில் மேலும் சோதனைகளின் போது மடிக்கணினிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த சந்தேகத்திற்குரிய சீனப் பிரஜைகள், வெளிநாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பல்வேறு நபர்களை உள்ளடக்கிய பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.