கீழடி நாகரிகம் ஏன் மறைந்தது – புதிய ஆய்வுத்தகவல்

137

வைகை நதி வெள்ளம் காரணமாக கீழடி மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் – புதிய ஆய்வு

மதுரைக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறியிருக்கலாம் என சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுக் கட்டுரை, அக்டோபர் 25ஆம் தேதி அறிவியல் ஆய்விதழான Current Science-இல்
“Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை, ஆமதாபாதில் உள்ள Physical Research Laboratory-யைச் சேர்ந்த ஆய்வாளர்களும், தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை ஆய்வாளர்களும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

கீழடி தொல்லியல் தளத்தில் இருந்து பெறப்பட்ட மண் மாதிரிகள் Optically Stimulated Luminescence (OSL) எனப்படும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கே, கீழடியில் வாழ்ந்த மக்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேறச் செய்திருக்கலாம் என சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வெள்ள நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில், 2014 முதல் 2017 வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது.
இந்த அகழாய்வுகளில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. இதன் பின்னர், 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை தொடர்ந்து அங்கு அகழாய்வுகளை நடத்தி வருகிறது.

கீழடியில் கண்டறியப்பட்ட விரிவான கட்டட அமைப்புகளும், தொல்பொருட்கள் மீதான ஆய்வுகளும், கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இந்தப் பகுதியில் ஒரு நாகரிக நகர வாழ்வு இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில், ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த சில தொல்பொருட்கள் OSL ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது வெளியான இந்த ஆய்வுக் கட்டுரை, கீழடி நாகரிகத்தின் இடம்பெயர்வுக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக விளக்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.