கிளிநொச்சி கடல் பகுதியில் ரூ.15 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு கஞ்சா கைப்பற்றல்!

122

கிளிநொச்சி டெவில்ஸ் பொயிண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோகிராம் 300 கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல் புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைப்பற்றல் இடம்பெற்றது.

குறித்த கடல் பகுதியில் மிதந்த எட்டு சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனை செய்தபோது, அவற்றில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக தரையிறங்க முடியாமல் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.