கஹவத்தை அருகே மணிக்கக்கல் தொழிலதிபர் மர்மமாக காணாமல் போனது – பொலிஸார் விசாரணை தீவிரம்.!

100

கஹவத்தை – நீலகாமம் வீதியில் சனிக்கிழமை (28) நண்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரின் காணாமற்போனமை குறித்து கஹவத்தை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், காணாமல்போனவர் அந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தது தெரியவந்துள்ளது. அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், நீலகாமம் வீதியில் உள்ள ஒரு வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், காணாமல்போனவரின் கையடக்கத் தொலைபேசி, அந்த வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (29) கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணிகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை முன்னேற்றம் எதுவும் இல்லை.

இந்த சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல்போனவரை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணம் குறித்து விரிவான விசாரணைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.