ஈஷி கேஷ் போதைப்பொருள் விநியோகம்: சந்தேகநபர்கள் கைது.!!

193

ஈஷி கேஷ் அமைப்பு மூலம் ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (16) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் 638 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் “டுபாய் அபா” என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒருவர் இந்த சர்வதேச போதைப்பொருள் கும்பலின் தலைவராக உள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வென்னப்புவ பகுதியில் உள்ள விடுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 32 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும்,மதுகம, பதுரலிய மற்றும் ஹல்தடுவன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மதுகம பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த விடுதியை மாதந்தோறும் வாடகைக்கு எடுத்து இந்த மோசடியை நடத்தி வந்துள்ளமையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வென்னப்புவ, தங்கொட்டுவ, மாரவில, பன்னல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஈஷி கேஷ் அமைப்பு மூலம் இந்த போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் சீல் வைக்கும் இயந்திரம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய, சந்தேகநபர்கள் இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.