ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த ட்ரம்ப்.!

100

ஈரானுடன் இடம்பெற்று வரும் போரில் அமெரிக்க வெற்றி பெற்றுவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எனினும், தனது இந்தக் கூற்றுக்கு அவர் எந்தத் தெளிவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்போது அவர், “நாங்கள் வென்றுவிட்டோம் என்று நான் கூறுகிறேன். மிக விரைவாக ‘வெற்றி’ என்று சொல்ல விரும்பமாட்டோம். ஆனால் நாங்கள் வென்றுவிட்டோம். முதல் ஒரு மணி நேரத்திலேயே அது முடிந்துவிட்டது,” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான இந்தப் போரின் நிலைமை தொடர்பில் ட்ரம்ப் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு விதமான முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சில நேரங்களில், போர் திட்டத்தை விட வேகமாக முன்னேறுகிறது என்று கூறினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், இது நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கூறினார். மேலும், “நாம் ஏற்கனவே வென்றுவிட்டோம்… ஆனால் இன்னும் முழுமையாக வெல்லவில்லை” என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதல்களை அவர் ஒரு சில நேரங்களில் போர் என்றும், சிறிய இராணுவ நடவடிக்கை என்றும் விவரித்து வருகிறார்.

அதன்போது, கென்டக்கி மாநிலத்தில் நடந்த உரையின் போது, இராணுவ நடவடிக்கைக்கு Operation Epic Fury என்ற பெயரை எப்படி தேர்வு செய்தார் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

“எனக்கு சுமார் 20 பெயர்கள் கொடுத்தார்கள். அவற்றைப் பார்த்தபோது நான் தூங்கிவிடும் அளவுக்கு இருந்தது. எந்தப் பெயரும் பிடிக்கவில்லை. பிறகு ‘Epic Fury’ என்ற பெயரை பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் ‘இந்தப் பெயர் எனக்கு பிடித்தது’ என்று சொன்னேன்,” என்றார்.