இசைஞானி இளையராஜாவுக்கு மற்றுமொரு மகுடம்!

157

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ‘பத்மபாணி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்படவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது.

இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான அஜந்தா – எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, வரும், 28ல் தொடங்கி பெப்ரவரி 4 வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடக்கவுள்ளது.

இந்த விழாவின் தொடக்க நாளான ஜனவரி 28ல் ராஜ்யசபா எம்.பி.,யும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர். விருது பெறுவோருக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

இதேவேளை இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 ஜனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.