லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் உயிரிழப்பு.!!

187

கட்டுபொத பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடஹபொல ரம்பாவெவ வீதியில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொன்கொல்ல சந்தியில் உள்ள கொலமுனு ஓயா பாலத்தின் மீது பல்லேவெல நோக்கி பயணித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாதுகாப்புச் சுவருடன் மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதியும் அவரது உதவியாளரும் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆரம்ப விசாரணைகளில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மீரிகம மற்றும் கல்எலிய பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 63 வயதுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.