பெற்றோர் மற்றும் தரமற்ற பயிற்சியாளர்களின் தலையீட்டால் இலங்கை பாடசாலைக் கிரிக்கெட்டின் வீழ்ச்சி: சிதாத் வெத்தமுனி சுட்டிக்காட்டு

21

இலங்கை பாடசாலைக் கிரிக்கெட்டின் தரம் குறைந்து, எண்ணிக்கையை மட்டும் குவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாக மாற்றக் குழுவில் பணியாற்றும் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சிதாத் வெத்தமுனி தெரிவித்துள்ளார்.

 

பெற்றோரின் அதீத தலையீடு மற்றும் ஒரே இரவில் பெருகிவிட்ட தரம் குறைந்த பயிற்சியாளர்களின் நியமனம் ஆகியவையே பாடசாலைக் கிரிக்கெட்டின் இந்த அதீத பயன்பாட்டிற்குக் காரணமாக அமைந்துள்ளன.

 

முற்காலத்தில் 19 வயதுக்குட்பட்ட அணிகள் ஒரு பருவத்தில் 10 அல்லது 12 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், தற்போது மாணவர்கள் வருடத்தில் 365 நாட்களும் இடைவிடாமல் விளையாடுகிறார்கள்.

 

“பெற்றோரோ அல்லது பயிற்சியாளர்களோ எல்லைக்கோட்டிற்கு வெளியிலிருந்து கொண்டே களத்தடுப்பை அமைப்பது முதல் யார் மட்டையால் அடிக்க வேண்டும் என்பது வரை தீர்மானிக்கின்றனர்.

 

இன்று குழந்தைகள் வாரத்தில் ஏழு நாட்களும் பயிற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் ஓய்வெடுக்க முடிவதில்லை. மேலிருந்து தொடங்கி நாம் இவை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும்,” என்று வெத்தமுனி கூறினார்.

 

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் , 19 வயதுக்குட்பட்டோர் முதல் 15 வயதுக்குட்பட்டோர் வரையிலான நிலைகளில் ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடுகின்றன.

 

அதன் பின்னர் அவர்கள் தற்காலிக மாவட்ட, மாகாண மற்றும் பிராந்திய அணிகளில் சேர்க்கப்படுவதால், மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக எவ்வளவு நேரத்தை ஒதுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

நாட்டின் சர்வதேச அணிக்கு வீரர்களை வழங்கும் பாதையாக பாடசாலைக் கிரிக்கெட் விளங்குவதால், அதற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனினும், இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் இந்தக் குழப்ப நிலை மற்றும் சீர்கேடுகளை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது என்றும், இவற்றைச் சரிசெய்ய சிறிது காலம் ஆகலாம் என்றும் சிதாத் வெத்தமுனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.