அம்பாந்தோட்டையில் பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது.!!

55

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய, கசாகல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மத்தள பகுதியில் இருந்து வந்த கேப் ரக வாகனமொன்றை நேற்று (23) மாலை சோதனையிட்ட போதே இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, 14 கிலோகிராம் வெடிமருந்துகள், 240 ஜெலட்நைட் குச்சிகள், 350 கிலோகிராம் அமோனியா, 490 டெட்டனேட்டர்கள், 5,600 அடி நீளம் வெடிமருந்து நூல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வெடிபொருட்கள் பாறைகளை உடைக்கும் பணிக்காகக் கொண்டு செல்லப்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மற்றும் கேப் ரக வாகனம் வீரகெட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.